×

நிதி நிறுவன நிர்வாகிகள் திட்டியதால் தனியார் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை: சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு அருகே கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன் (33). இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. பத்மநாபன் சென்னை தரமணியில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.கடந்த சில மாதங்களுக் முன் பத்மநாபன், மதுராந்தகத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ₹3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனுக்கான தவணையை மாதந்தோறும் செலுத்தியுள்ளார். ஆனால், கடந்த மாதம் குடும்ப சூழ்நிலை காரணமாக, தவணை தொகையை செலுத்தவில்லை என தெரிகிறது. இதையடுத்து, தனியார் நிதி நிறுவன நிர்வாகிகள், கல்பட்டு கிராமத்துக்கு சென்று, பத்மநாபனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம், அவரை பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.இதுபற்றி, சென்னையில் இருந்த பத்மநாபனுக்கு தெரிவித்தனர். இதனால், மன உளைச்சல் அடைந்த அவர், சென்னையில் உள்ள தனது வீட்டில் நேற்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்த உறவினர்கள், மதுராந்தகத்தில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தின் நுழைவாயில் அருகே மதுராந்தகம் – சூனாம்பேடு சாலையில் வைத்து, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பத்மநாபனின் சாவுக்கு காரணமான நிதி நிறுவன நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். தகவலறிந்து மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து சடலத்தை எடுத்து கொண்டு, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.  இதனால், சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post நிதி நிறுவன நிர்வாகிகள் திட்டியதால் தனியார் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை: சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Madhuranthakam ,Padmanapan ,Kalpattu ,Soonampedu, Chengalpattu district ,Maduranthakam ,Nandini ,Dinakaran ,
× RELATED வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில்...