×

கோவையில் யூபிஎஸ் வெடித்து மின் கசிவால் தீ விபத்து தாயுடன் 2 மகள்கள் பலி-தந்தை இறந்த 2 ஆண்டில் குடும்பமே பறிபோன பரிதாபம்

பெ.நா.பாளையம் :  கோவை அருகே நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் தாயுடன் 2 இளம்பெண்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.கோவை வெள்ளக்கிணர் அருகே உள்ளது உருமாண்டம்பாளையம். இங்குள்ள ஜோஸ் கார்டன் பகுதியில் வசித்தவர் விஜயலட்சுமி  (49). இவரது மகள்கள் அர்ச்சனா (24), அஞ்சலி (22). விஜயலட்சுமியின் கணவர் ஜோதிலிங்கம் கடந்த 2 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். அர்ச்சனா சாயிபாபா  காலனியில் உள்ள நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அஞ்சலி  ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஐடி கம்பெனியில் அஞ்சலி வேலை செய்தார். நேற்று அதிகாலை விஜயலட்சுமியின்  வீட்டில் இருந்து புகை வந்தது. இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தது  கவுண்டம்பாளையம் வடக்கு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள்  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து உள்ளே  சென்று பார்த்தனர். அப்போது சமையல் அறையில் விஜயலட்சுமியும், அவரது ஒரு மகளும், படுக்கை அறையில் மற்றொரு மகளும் இறந்து கிடந்தனர். தகவல்  அறிந்த பெரியநாயக்கன்பாளையம்  டிஎஸ்பி ராஜபாண்டியன், துடியலூர்   இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் உள்ளிட்ட  போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு  செய்தனர். பலியானவர்களின் உடல்களை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடய அறிவியல்  துறையினரை வரவழைத்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் யூபிஎஸ் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.   இது  குறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில், ‘‘வீட்டின் ஹால் பகுதியில்  இருந்த யூ.பி.எஸ். கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெடித்து தீ விபத்து  ஏற்பட்டுள்ளது.இதை அணைக்க அஞ்சலி மற்றும் அவரது  தாய் ஆகிய இருவரும்  முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் தீ மளமளவென பரவியதால், சமையல் அறையில்  விஜயலட்சுமியும், அஞ்சலியும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். அர்ச்சனா படுக்கை அறையில் உறக்கத்திலேயே மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்’’ என்றனர். தந்தை இறந்த 2 ஆண்டில் அந்த குடும்பத்தைச்  சேர்ந்த 3 பேரும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.செல்ல நாயும் உயிரிழந்தது அர்ச்சனாவும்,  அஞ்சலியும் செல்லமாக நாய் வளர்த்து வந்தனர். அவர்கள் வேலைக்கு  செல்லும்போது குரைப்பதும், வேலையை விட்டு வரும்போது தாவி தவழ்ந்து  விளையாடுவதுமாக அது இருந்தது. நாய் மீது அவர்களுக்கு கொள்ளை பிரியம்.  நாயை வெளியே கட்டாமல் தங்கள் அருகிலேயே படுக்க வைத்து கொஞ்சி மகிழ்வார்கள். இந்த தீ விபத்தில் அவர்கள் செல்லமாக வளர்த்த நாயும் மூச்சுத்திணறி  உயிரிழந்தது.தாயின் காலடியில் உயிரை விட்ட மகள்தீ விபத்து சம்பவம் இரவோ அல்லது  அதிகாலையோ  நடந்திருக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அஞ்சலி உயிருக்கு போராடிய நிலையில் இறந்து  கிடக்கும் தாய் காலின் மேல் மண்டியிட்ட நிலையில் மூச்சு திணறி உயிரை  விட்டுள்ளார். தாயின் கால் அடியில்  உயிர் விட்ட மகளின் நிலையை பார்த்த பெண்கள் கதறி அழுது கல் நெஞ்சையும் உருக  செய்தது….

The post கோவையில் யூபிஎஸ் வெடித்து மின் கசிவால் தீ விபத்து தாயுடன் 2 மகள்கள் பலி-தந்தை இறந்த 2 ஆண்டில் குடும்பமே பறிபோன பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,UPS ,and fire ,B.N. Palayam ,
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை