சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 95 பேருக்கு பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சி டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தலைமைச் செயலகத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் சிலருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பணி நியமன ஆணைகளை வழங்கினார். மீதம் உள்ள 91 பேருக்கு இங்கு வழங்கப்படுகிறது. தற்போது, பணி நியமன ஆணைகளை பெற்றுள்ளவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளி மாணவர்கள் விவரங்களை திரட்டும்போது, கடந்த 2013ம் ஆண்டில் இருந்தே கல்வி மேலாண்மை தகவல் முறை(EMIS) மாணவர்களின் விவரங்கள் திரட்டப்பட்டு வருகிறது. அதில் மாணவர்களின் சாதியையும் கேட்கும் வழக்கம் இருந்து வருகிறது. மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பள்ளி குழந்தைகளின் சாதி என்பது பள்ளிச் சான்றில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தில் சாதியை தெரிவிக்க விரும்புவோர் குறிப்பிடுகின்றனர். விரும்பாதவர் அதை சொல்லவோ குறிப்பிடவோ தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளோம். எதிர்காலத்தில் மாணவர்களின் விவரங்கள் பார்க்கும் அந்த மாணவர்கள் எந்த சாதி என்பதை விட பிசியா, எம்பிசியா என்று காட்டுமே தவிர அவர் என்ன சாதி என்று வரக்கூடாது என்ற வகையில் அதை முறைப்படுத்தியுள்ளோம். வரும் மே மாதம் முதல் இந்த முறையே பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முதல் சாதியை குறிப்பிடும் முறை இருந்து வந்தது. அந்த நடைமுறையை நாங்கள் மாற்றியுள்ளோம். ஆனால் சாதிப் பெயரை கேட்பதாக ஒரு செய்தி பரவியுள்ளது. எது எதனால் என்று தெரியவில்லை. பெண் குழந்தைகளிடம் சில கேள்விகள் கேட்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில் இருந்து சில கேள்விகள் கேட்டுள்ளனர். அதை மாற்றி வேறு விதமாக கேட்டுள்ளதாக தெரிகிறது. அது மாதிரியான கேள்விகள் எதுவும் கல்வி மேலாண்மை முறையில் கேட்கப்படவில்லை. தற்போது மாணவர்களின் விவரங்கள் திரட்டும் வினாக்கள் வடிவமைத்துக் கொண்டு இருக்கிறோம். இன்னும் முடிவு செய்யவில்லை. மாணவ, மாணவியர் சங்கடப்படும் கேள்விகள் தவிர்க்கப்படும். சாதியை குறிப்பிடுவதும், சொல்லும் போதுதான் அவர்களுக்கான சலுகைகள் கிடைக்கும். அவர்கள் வேண்டாம் என்றால் விட்டுவிடலாம். தமிழகத்தில் இயங்கி வரும் பள்ளிகளில் 54 பள்ளிகளில் தமிழ் வகுப்புகள் இல்லை என்று புகார் எழுந்துள்ளது. அது குறித்து விவரங்கள் திரட்டப்படும்.கல்வித்துறைக்கு எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று அரசு வகுத்துக் கொடுகிறதோ அதை அடிப்படையாகக் கொண்டு தான் கல்வித்துறை இயங்கிக் கொண்டு இருக்கிறது. புதிய கல்வி கொள்கையில் எந்த அம்சத்தையும் நாம் எடுக்கவில்லை. தற்போது தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை வடிவமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். அதை வெளியிடும் போது, எதை அடிப்படையாக கொண்டு மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதும் புரியும். தற்போது தமிழகத்தில் 7500 பள்ளிகள் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. பழுதான கட்டிடங்கள் இடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி சீரமைப்புக்கு கடந்த ஆட்சியில் ரூ. 75 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆட்சியில் ரூ.250 கோடி உயர்த்தி ஒதுக்கியுள்ளோம் என்றார்….
The post விவரங்களை சேகரிக்கும்போது மாணவர்களின் ‘சாதி’ பற்றி கேள்வி இடம் பெறாது: பள்ளிக் கல்வி அமைச்சர் விளக்கம் appeared first on Dinakaran.