×

பைக் மீது லாரி மோதி விபத்து போக்குவரத்து ஊழியர்கள் 2 பேர் உடல் நசுங்கி பலி: தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நேற்று அதிகாலை மாநகர போக்குவரத்து கழக கண்டக்டர்கள் 2 பேர் சென்ற பைக் மீது லாரி மோதியதில், அவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து பலியானார்கள். இதுதொடர்பாக போலீசார், லாரி டிரைவரை கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகா, தச்சூரை சேர்ந்தவர் நந்தகோபால் (55). சென்னை ஆலந்தூர் மாநகர போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் திருக்கழுக்குன்றம், புல்லேரிமேடை சேர்ந்தவர் ஜோதிபிரகாஷ் (45). சென்னை பல்லவன் சாலையில் உள்ள சென்ட்ரல் போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில், நேற்று அதிகாலையில் நந்தகோபால், ஜோதிபிரகாஷ் ஆகியோர் ஒரே பைக்கில் வேலைக்கு புறப்பட்டனர். செங்கல்பட்டு அருகே ராட்டிண கிணறு ரயில்வே மேம்பாலத்தை கடந்தபோது, பின்னால் அசுர  வேகத்தில்  வந்த ஒரு லாரி, கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் அதே லாரியின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே, துடிதுடித்து இறந்தனர். தகவலறிந்து செங்கல்பட்டு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் சக்திவேல் (32) என்பவரை கைது செய்தனர்.குன்றத்தூர்: போரூர் அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செந்தில். ஆட்டோ டிரைவர். இவரது மகன் சுகுமார் (13). மவுலிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் பள்ளி முடிந்ததும் சிறுவன் சுகுமார், குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கத்தில் உள்ள கிணற்றுக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றான். அப்போது, நண்பர்கள் அனைவரும் தண்ணீரில் ஜாலியாக குளித்துக் கொண்டிருந்தனர். அதை பார்த்த சுகுமாரும் தண்ணீரில் இறங்கினான். ஆனால் நீச்சல் தெரியாத சிறுவன், தண்ணீரில் மூழ்கினான். இதை பார்த்த நண்பர்கள், அவனை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. தகவலறிந்து சென்னை விருகம்பாக்கம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று, நீண்ட நேரத்துக்கு பின், தண்ணீரில் மூழ்கிய சிறுவனை சடலமாக மீட்டனர். இதையடுத்து குன்றத்தூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post பைக் மீது லாரி மோதி விபத்து போக்குவரத்து ஊழியர்கள் 2 பேர் உடல் நசுங்கி பலி: தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Chengalputtu ,Chengalputt ,Transport Conductors ,Lorry ,
× RELATED செங்கல்பட்டு அருகே கார் உதிரி பாக தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து