×

திருவனந்தபுரத்தில் இன்று அதிகாலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீயில் கருகி பலி: 8 மாத குழந்தையும் தப்பவில்லை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கலாவில் இன்று அதிகாலை வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 மாத ஆண் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கருகி பலியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கலா பகுதியை சேர்ந்தவர் பிரதாபன் (64). அந்த பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தார். அவரது மனைவி ஷெர்லி (53). இந்த தம்பதிக்கு நிகில் (28), அகில் (25) என்ற 2 மகன்கள். நிகிலுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவரது மனைவி அபிராமி (24). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை (8 மாதம்). அனைவரும் ஒரே வீட்டில் தான் வசித்து வந்தனர். உணவு சாப்பிட்டு விட்டு நேற்று இரவு வழக்கம் போல் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தற்செயலாக இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பக்கத்து வீட்டினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் தீ மள மளவென பரவத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வர்க்கலா போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயை அணைத்த பிறகு வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது பிரதாபன், ஷெர்லி, இளைய மகன் அகில், அபிராமி மற்றும் 8 மாத குழந்தை ஆகிய 5 பேரும் தீயில் கருகி இறந்த நிலையில் கிடந்தனர். இதில் நிகில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு வர்க்கலாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீ விபத்துக்கான காரணம் உடனே தெரியவில்லை. பிரதாபனின் வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் ஏசி பொருத்தப்பட்டு இருந்தது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இருப்பினும் தீ விபத்துக்கான உண்மையான காரணம் இதுவரையிலும் தெரியவில்லை. அது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஆனால் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களில் தான் முதலில் தீப்பிடித்ததை பார்த்ததாக அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் கூறுகின்றனர். இது குறித்து வர்க்கலா போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தீப்பிடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது….

The post திருவனந்தபுரத்தில் இன்று அதிகாலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீயில் கருகி பலி: 8 மாத குழந்தையும் தப்பவில்லை appeared first on Dinakaran.

Tags : thiruvananthapuram ,Kalla ,Kerala ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...