×

சிறுமியை கொடுமைப்படுத்தியவருக்கு 41 ஆண்டு சிறை, ஆயுள் தண்டனை; சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன் (23) ஏற்கனவே திருமணமானவர். இவர், கடந்த 2015ம் ஆண்டு சூளை தட்டான்குளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். இதன்பின்பு, தனது சகோதரர் வீட்டில் வைத்து சிறுமியை திருமணம் செய்துள்ளார். பின்னர், அயனாவரத்தில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார். அப்போது சிறுமி மீது சந்தேகம் அடைந்து மது போதையில் அடித்து துன்புறுத்தி உள்ளார். மேலும், ஆசைக்கு இணங்க மறுத்த சிறுமியை சிகரெட்டால் உடலின் பல்வேறு பகுதிகளில் சூடு வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். கத்தியால் சிறுமியின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் புளியந்தோப்பு மகளிர் போலீசார் கருணா என்ற கருணாகரன் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்(போக்சோ) உள்ளிட்ட 6 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட கருணா என்ற கருணாகரன் மீதான 6 குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மொத்தம் 41 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 36 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆயுள்தண்டனையும்(14 ஆண்டுகள்), கடத்தல் குற்றச்சாட்டுக்காக 10 ஆண்டு, கொலை மிரட்டல் குற்றச்சாட்டுக்கு 7 ஆண்டு, குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் 2 ஆண்டு சிறை தண்டனை, கத்தியால் அறுத்து காயப்படுத்திய குற்றச்சாட்டுக்காக ஓராண்டு, ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தி சூடு வைத்த குற்றச்சாட்டுக்காக 7 ஆண்டு என மொத்தம் 41 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும். அனைத்து தண்டனைகளையும் அனுபவித்த பின்பு கடைசியாக ஆயுள்தண்டனையை அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.7 லட்சம் வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.    …

The post சிறுமியை கொடுமைப்படுத்தியவருக்கு 41 ஆண்டு சிறை, ஆயுள் தண்டனை; சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Women ,Chennai ,Karunakaran ,Pulianthoppu ,Chulai Thattankulam ,Chennai Women's Court ,Dinakaran ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...