புதுடெல்லி: தெருவோர குழந்தைகள் வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தெருவோர குழந்தைகளின் நலன்கருதி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்துள்ளது. இவ்வழக்கை கடந்த ஜன. 27ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, ‘தெருவோரம் சுற்றும் குழந்தைகள் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்கிறோம். எனவே தெருவில் சுற்றும் குழந்தைகள் மீட்பு தொடர்பாக மாநில மற்றும் யூனியன் அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கை விபரங்களை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்’ எனக்கூறியது. இந்நிலையில் தெருவோர குழந்தைகள் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, இன்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.அதில், ‘தமிழகத்தில் மொத்தம் 1,709 தெருவோர குழந்தைகள் கண்டறிப்பட்டுள்ளது. அதில் 1,403 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 17 குழந்தைகள் திறந்தவெளி கூடாரத்தில் இருக்கின்றனர். 343 பேர் கல்வி பயின்று வருகின்றனர். 1,454 குழந்தைகளுக்கு தேவையான ஆலோசனை வழங்கப்பட்டு வரப்படுகிறது. 331 குழந்தைகளுக்கு மருத்துவம் உள்ளிட்ட உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 803 குழந்தைகள் பிச்சை எடுக்கும் தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர். அவர்களை மீட்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரப்படுகிறது. குறிப்பாக 263 தெருவோர குழந்தைகள் ஒன்றிய, மாநில அரசுகளின் அனைத்து சலுகை திட்டங்களையும் பெற்று வருகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற மாநில அரசுகள், ஒன்றிய அரசின் தரப்பிலும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது….
The post தெருவோர குழந்தைகள் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் appeared first on Dinakaran.