சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் நடந்த மாசி மக மஞ்சு விரட்டில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் பாலதண்டாயுதபாணி கோயில் மாசி மகத்திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. ஐந்துநிலை நாடார்கள் சார்பில் நடந்த மஞ்சுவிரட்டில் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 125 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக வயல்வெளிகளிலும், சாலை ஓரங்களிலும் அவிழ்த்து விடப்பட்டன. மஞ்சுவிரட்டு காண பெண்கள், குழந்தைகள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மலைமீது பாறையில் அமர்ந்து கண்டு ரசித்தனர். இதனால் மலை முழுவதும் மனித தலையாய் காட்சியளித்தது. மஞ்சு விரட்டில் காளைகள் முட்டி 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரான்மலை வட்டார மருத்துவர் நபிஷா பானு தலைமையில் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.இவர்களில் கனிஷ்வரன் (19), கொட்டாம்பட்டி குணா (19), புதுக்கோட்டை சிதம்பரம் (62), உலகம்பட்டி ஜெயசுந்தரம், தெற்கு சித்தாம்பட்டி ஏழுமலை (25), காரைக்குடி சதீஸ்குமார் (25) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை, சிங்கம்புணரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பொதுமக்களுக்கு சாலை நெடுகிலும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. டிஎஸ்பி ஆத்மநாதன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன….
The post மலையெங்கும் மனித தலைகள்; அரளிப்பாறையில் மாசி மக மஞ்சுவிரட்டு: 100க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.