×

வனவிலங்குகள் பலியை தடுக்க புலிகள் சரணாலய சாலையில் நாளை முதல் 12 மணிநேர போக்குவரத்து தடையை அமல்படுத்த வேண்டும்: வனத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வனவிலங்குகள் நல ஆர்வலரும், வழக்கறிஞருமான சொக்கலிங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2013ம் ஆண்டு சத்தியமங்கலம் விலங்குகள் சரணாலயம் என்பது புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள இந்த சரணாலயத்தில் புலிகள் மட்டுமல்லாமல், சிறுத்தை, யானை, மான், காட்டெருமை போன்ற விலங்குகளும் உள்ளன. சரணாலயத்தின் வழியே பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதி வனவிலங்குகள் பலியாகின்றன. இருபத்தி நான்கு மணி நேரமும் கனரக வாகனங்களும், இலகு ரக வாகனங்களும் செல்கின்றன. ஒரு நாளைக்கு 5000 வாகனங்கள் வரை இந்த சாலையில் செல்கின்றன. கடந்த 2012 முதல் 2021ம் ஆண்டு வரை 8 சிறுத்தை, ஒரு யானை, 71 மான்கள், 55 மயில்கள் என 155 வன விலங்குகள் வாகனங்கள் மோதி பலியாகியுள்ளன. அதனால் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வானங்கள் போக்குவரத்துக்கும், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பிற வாகனங்கள் போக்குவரத்துக்கும் தடை விதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து 2019ல் ஈரோடு கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை. ஏற்கனவே இது சம்பந்தமான வழக்கில் உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்டவர்களின் கூட்டம் நடத்தி சுமுக தீர்வு காண உத்தரவிட்டுள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், மக்கள் எதிர்ப்பு காரணமாக, மாவட்ட கலெக்டர் உத்தரவை அமல்படுத்தவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்ற போதும் கலெக்டரின் உத்தரவை அமல்படுத்த வேண்டும். அதை மீறுவோரின் பெயர் பட்டியலை வனத்துறை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். மாவட்ட கலெக்டரின் உத்தரவை அமல்படுத்தாததால் ஏற்பட்ட விலங்குகளின் மரணத்துக்கு வனத்துறை அதிகாரிகளை ஏன் பொறுப்பாக்க கூடாது, உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என்றால் அவர்களுக்கு ஊதியம் எதற்கு, வனத்துறை அதிகாரிகள், வனத்தையும், வன விலங்குகளையும் பாதுகாக்கவே நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதித்த உத்தரவை நாளை முதல் அமல்படுத்த வேண்டும். இதுவரை இந்த உத்தரவை அமல்படுத்தாமல் இருந்தது ஏன் என்று வனத்துறை விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்….

The post வனவிலங்குகள் பலியை தடுக்க புலிகள் சரணாலய சாலையில் நாளை முதல் 12 மணிநேர போக்குவரத்து தடையை அமல்படுத்த வேண்டும்: வனத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tiger Reserve Road ,Chennai ,Sokkalingam ,High Court ,Sathyamangalam ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...