×

கோயில் நில முறைகேடுகளுக்கு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்: கொள்கையில் மாற்றம் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயில் நிலங்களில் நடக்கும் முறைகேடுகளுக்கு அதிகாரிகளை பொறுப்பாக்கும் வகையில் கொள்கையில் மாற்றம் கொண்டு வருமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தேன்கனிக்கோட்டை அனுமந்தராய சுவாமி கோயில் உள்ளிட்ட  7 கோயில்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிலங்களில் அதிகாரிகளின் உதவியுடன் சட்டவிரோத குவாரி நடத்தி, பலர் கொள்ளையடித்து வருவதாக  ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நிலங்களை மீட்டு, கோயில்களின் செயல்பாட்டுக்கு பயன்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் குற்றச்சாட்டுகள் அடிப்படையில், சட்டவிரோத குவாரிகளுக்கு கனிமவளத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி, ‘கோயில் நிலங்களில் நடக்கும் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட கலெக்டர்  ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும். சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை தடுக்கவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கிரிமினல் மற்றும் சிவில் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கோயில் நிலங்களில் சட்டவிரோத குவாரி நடக்கும் விவகாரத்தில் அரசு ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிந்து  விசாரணை நடத்த வேண்டும்.சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையும், கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். சட்டவிரோத நடவடிக்கைகளை  தடுக்கவும், கண்காணிக்கவும் அரசுத்துறைகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். உன்னதமான ஆன்மாக்கள், கோயில்களுக்காகவும், பக்தர்களுக்காகவும் சொத்துக்களை தானமாக வழங்கியுள்ளனர். அவற்றை பாதுகாக்க வேண்டிய கடமை கோயில் நிர்வாகத்துக்கு உள்ளது.கோயில் சொத்துக்களை முறையாக பராமரிக்க தவறும் அதிகாரிகளை இந்த குறைபாடுகளுக்கு பொறுப்பாக்க வேண்டும். கோயில் சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படாததால், அவை கொள்ளையடிக்கப்படுகின்றன. தற்போது இந்து சமய அறநிலையத் துறை சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஆனால், அது போதுமானதல்ல. கோயில் சொத்துக்களை மீட்கும் விஷயத்தில் அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தனி குழு நியமித்து திறமையாகவும், விரைவாகவும் இச்சொத்துக்கள் மீட்பதை உறுதி செய்ய வேண்டும்.அதிகளவில் முறைகேடுகளை அனுமதிப்பதன் மூலம் அரசு துறை தனது கடமையில் இருந்து  தவறிவிட்டதால் அரசுத்துறை அதிகாரிகளை பொறுப்பாக்கும் வகையில் கொள்கை மாற்றம் கொண்டு வர வேண்டும். சொத்துக்களை மீட்பதுடன், வருவாய் இழப்பையும் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’  என்று உத்தரவிட்டார்….

The post கோயில் நில முறைகேடுகளுக்கு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்: கொள்கையில் மாற்றம் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu government ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...