தூத்துக்குடி : தூத்துக்குடியில் செல்போன் திருடிய ஜார்க்கண்ட் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.தூத்துக்குடி கிருஷ்ணராஜாபுரம் 2வது தெருவை சேர்ந்த சீமதுரை மகன் கண்ணன் (19). இவர், நேற்று முன்தினம் மாலை கருப்பட்டி சொசைட்டி அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 3 வாலிபர்கள் அவரது செல்போனை பறித்துச் சென்றனர். இதையடுத்து கண்ணன், அவரது நண்பர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் சேர்ந்து அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்ற இருவர் தப்பியோடி விட்டனர். பிடிபட்ட வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது. இதில் அவர், காயமடைந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு விசாரணையில், அவர் தனது பெயரை நிமியா முண்டா மகன் நமன்முண்டா (39) என்று தெரிவித்துள்ளார்.இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் நமன்முண்டாவை 2 வாலிபர் வெளியே அழைத்து சென்றுள்ளனர். அதன் பிறகு அதிகாலை ஜிஹெச் நுழைவாயில் அருகேயுள்ள கழிவறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலை, நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் காயங்களுடன் நமன் முண்டா சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து ஜிஹெச் செக்யூரிட்டி நடுவக்குறிச்சி மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் டவுன் டிஎஸ்பி கணேஷ், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், எஸ்ஐ சிவக்குமார் மற்றும் போலீசார் சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்தனர்.முதற்கட்ட விசாரணையில், ஜார்க்கண்ட் மாநிலம் விஜயகிரி அருகேயுள்ள புருகட்டு பகுதியை சேர்ந்த நிமியா முண்டா மகன் நமன்முண்டா சில மாதங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடையில் உள்ள கெமிக்கல் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட போது செல்போனை பறிகொடுத்தவர் மற்றும் சிலர் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நள்ளிரவில் அவரை 2 வாலிபர்கள் வெளியே அழைத்து செல்வது ஜிஹெச் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதன்பிறகே அவர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் மொட்டைசாமி (31), கிருஷ்ணராஜபுரம் குமாரவேல்(19), கிருஷ்ணராஜபுரம் செல்லக்கண்ணு (20) உள்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நட த்தி வருகின்றனர். ஜிஹெச் செக்யூரிட்டி ஒருவரும் இச்சம்பவத்திற்கு உதவியதாக தெரிய வந்துள்ளது. அதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது….
The post தூத்துக்குடியில் செல்போன் திருடிய ஜார்க்கண்ட் வாலிபர் அடித்து கொலை-5 பேரிடம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.