×

சென்னை பாண்டி பஜாரில் உள்ள 3 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் 70 பேர் உயிர் தப்பினர்

சென்னை: சென்னை பாண்டி பஜாரில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் சிக்கிய சின்னத்திரை நடிகர் ஸ்ரீ உட்பட 70 பேரை தீயணைப்பு வீரர்கள் கிரேன் உதவியுடன் பத்திரமாக மீட்டனர். சென்னை பாண்டி பஜாரில் 3 மாடி கொண்ட வணிக வளாகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த வளாகத்தின் தரைத்தளத்தில் தனியார் வங்கியும், முதல் தளத்தில் துணிகடை மற்றும் நகைக்கடைகளும், மூன்றாவது தளத்தில் கிறிஸ்துவ வழிபாடு நடத்தும் ஜெபக்கூடம்  இயங்கி வருகிறது. வழக்கம் போல், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் வணிக வளாகத்தில் அதிகளவில் காணப்பட்டது. மேலும், ஜெபக்கூட்டத்துக்கும் அதிகளவில் பொதுமக்களும் வந்தனர். வணிக வளாகத்தின் 2வது தளத்தில் உள்ள துணிக்கடையில் மதியம் திடீரென கரும் புகையுடன் தீ வெளியேறியது. இதை பார்த்த பொதுமக்கள் வணிக வளாகத்தில் இருந்து அலறி அடித்து கொண்டு வெளியேறினர். ஆனால், புகை மூட்டம் 3வது தளத்தில் பரவியதால் கிறிஸ்துவ ஜெபக்கூட்டத்தில் பங்கேற்ற 70க்கும் மேற்பட்டோர் வெளியே வர முடியாமல் சிக்கி கொண்டனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் படி தி.நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, வணிக வளாகத்தில் பரவிய தீயை கடுமையாக போராடி கட்டுப்படுத்தினர்.இந்த தீ விபத்தின் போது 3வது தளத்தில் உள்ள ஜெபக்கூட்டத்தில் கலந்து கொண்ட சின்னத்திரை நடிகர் ஸ்ரீ உட்பட 70க்கும் மேற்பட்டோர் வணிக வளாகத்தின் மொட்டை மாடிக்கு சென்று உயிர் தப்பினர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் ராட்சத கிரேன் உதவியுடன் வணிக வளாகத்தின் மொட்டை மாடியில் இருந்த சின்னத்திரை நடிகர் ஸ்ரீ உட்பட 70க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வணிக வளாகத்தில் உள்ள துணிக்கடையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது. இதனால் சிறிது நேரம் பாண்டி பஜார் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

The post சென்னை பாண்டி பஜாரில் உள்ள 3 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் 70 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Chennai Pandi Bazaar ,Chennai ,
× RELATED சென்னை பாண்டி பஜாரில் இன்று மோடி ரோடு...