×

வீட்டின் முன் கார் நிறுத்திய தகராறு; முதியவர் அடித்துக்கொலை: ஒருவர் கைது

புழல்: புழல், சிவராஜ் 3வது தெருவை சேர்ந்தவர் பரதராமர் (61). பாரிமுனையில் ஒரு தனியார் மெடிக்கல் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் குமரன் (48), சொந்தமாக கார் ஓட்டி வருகிறார். கடந்த 1ம் தேதி பரதராமர் வீட்டு முன்பு குமரன் தனது காரை நிறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பரதராமர், காரை அங்கிருந்து எடுக்கும்படி குமரனிடம் கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர், வாக்குவாதம் முற்றியதில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த குமரன், அவரது தாய் மலர், மனைவி ரேவதி, உறவினர்கள் அருணகிரி, பழனி, சங்கீதா ஆகிய 6 பேர் சேர்ந்து, பரதராமரை உருட்டுக் கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதில், படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர் இதை கண்ட 6 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து, படுகாயமடைந்த பரதராமரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரதராமர் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த புழல் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை வழக்குப்பதிவு செய்து, குமரனை நேற்று முன்தினம் இரவு கைது செய்து, மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பொன்னேரி கிளைச்சிறையில் அடைத்தனர். தலைமறைவான 5 பேரை தேடி வருகின்றனர்….

The post வீட்டின் முன் கார் நிறுத்திய தகராறு; முதியவர் அடித்துக்கொலை: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Bharatharamar ,Sivaraj 3rd Street, Puzhal ,Barimuna ,Dinakaran ,
× RELATED புழல் சிறைச்சாலையில் பெண் கைதி உயிரிழப்பு