×

பெட்டியில் இருந்ததை பார்க்காமல் நகை மாயமானதாக கூறி கடை ஊழியரை கடத்தி அறையில் அடைத்து சித்ரவதை

 

விழுப்புரம், ஜூலை 19: விழுப்புரம் நகைக்கடையில் நகை மாயமானதாக கூறி ஊழியரை கடத்திச்சென்று ரூமில் அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்ததாக உரிமையாளர்கள் 2பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் பிரகாஷ், ராஜேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து நகைக்கடை நடத்தி வருகின்றனர்.

இவர்களது கடையில் விழுப்புரத்தை சேர்ந்த கலையரசன்(35) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக நகை செய்யும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையிலிருந்த 3 கிராம் தங்க நகையை காணவில்லையாம். இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ், ராஜேஷ் ஆகியோர், கலையரசன்தான் எடுத்திருப்பார் என்று நினைத்து அவரை கடத்தியுள்ளனர்.

தொடர்ந்து கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள வீட்டின் மாடியில் உள்ள அறையில் கலையரசனை வைத்து பூட்டி இரும்புபட்டையால் சரமாரியாக தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளனர். தொடர்ந்து கடைக்குவந்து பார்த்தபோது பிரகாஷின் பெட்டியில் மாயமானதாக கூறப்பட்ட நகை இருந்துள்ளது.

பின்னர் கலையரசனை அறையிலிருந்து வெளியே விடுவித்துள்ளனர். பலத்தகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நகை கடை உரிமையாளர்கள் 2பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெட்டியில் இருந்ததை பார்க்காமல் நகை மாயமானதாக கூறி கடை ஊழியரை கடத்தி அறையில் அடைத்து சித்ரவதை appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Prakash ,Rajesh ,
× RELATED ஓய்வூதியர் தின விழா