- காசி விஸ்வநாதர் கோவில்
- Valaja
- ராணிப்பேட்டா மாவட்டம்
- காஸி
- விஸ்வநாதர் கோயில்
- வாலாஜா ட்ரங்க் சாலை
- காசிவிஸ்வநாதர் கோயில்
வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா டிரங்க் ரோட்டில் மிகவும் பழமையான புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இங்கு தினமும் இருவேளை பூஜைகள் நடத்தப்படுகிறது. கோயிலை சுற்றி 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. ேகாயில் பாதுகாப்பு கருதி சிசிடிவி, அலாரம் பொருத்தப்பட்டுள்ளது. கோயிலில் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென அலாரம் ஒலிக்கும் சத்தம் கேட்டதால் பொதுமக்கள் விரைந்து சென்று பார்த்தனர். தகவல் அடிப்படையில், கோயில் நிர்வாகிகள் வந்து கோயிலை திறந்து பார்த்தபோது உட்பிரகாரத்திற்கு செல்லும் பிரதான இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அடுத்துள்ள இரும்பு ஷட்டரின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. 3வதாக உள்ள மரக்கதவின் பூட்டும் உடைக்க முயற்சி நடந்தது தெரியவந்தது. அங்குள்ள பூஜை பொருட்கள், சுவாமி துணிகள் வைக்கும் அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவில் இருந்த சுவாமியின் துணிகள், பூஜை பொருட்கள் சிதறிக்கிடந்தது. சிசிடிவி கேமரா மானிட்டர் திருடப்பட்டிருந்தது.இதுகுறித்து அறிந்ததும் வாலாஜா போலீசார் சென்று விசாரணை நடத்தினர். நள்ளிரவில் கோயில் சுற்றுச்சுவர் வழியாக மர்ம ஆசாமிகள் எகிறி கோயிலுக்குள் குதித்து உட்பிரகாரத்தில் உள்ள ஒவ்வொரு கதவாக உடைத்துச்சென்றுள்ளனர். அங்கு மரக்கதை உடைக்க முயற்சிக்கும்போது அதிலிருந்த அலாரம் ஒலித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மர்ம ஆசாமிகள் தப்பிச்சென்றுள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கோயில் கருவறையில் வைத்திருந்த டிஸ்க்கை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி, மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.ராணிப்பேட்டையில் 2 நாட்களுக்கு முன் அதிமுக பிரமுகர் சுகுமார் வீட்டில் பணம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகள் கேமரா ஹார்டு டிஸ்க் மற்றும் மானிட்டரை திருடிச்சென்றுள்ளனர். தற்போது காசி விஸ்வநாதர் கோயிலில் திருட வந்த மர்ம ஆசாமிகள் மானிட்டரை திருடிச்சென்றுள்ளனர். எனவே இதில் ஒரே கும்பல் ஈடுபட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….
The post அடுத்தடுத்து 3 கதவுகளை உடைத்து காசி விஸ்வநாதர் கோயிலில் கொள்ளை appeared first on Dinakaran.