சென்னை: தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கடந்த மாத தொடக்கத்தில் ஜெட் வேகத்தில் அதிகரிக்க தொடங்கியது. இதனால் கடற்கரைகளுக்கு செல்ல ஜனவரி 31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா தொற்று வேகமாக பரவியதால் மக்கள் யாரும் கடற்கரைக்குள் செல்லாதவாறு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தியது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதேபோன்று, சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு செல்ல சென்னை மாநகராட்சி நேற்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. கூட்டமாக சென்றாலோ அல்லது மாஸ்க் அணியாமல் சுற்றி திரிந்தாலோ அவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க போலீசார், மாநகராட்சி பணியாளர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒரு மாதத்துக்கு பின்பு பொதுமக்கள் நேற்று காலை முதல் கடற்கரைகளில் குவியத் தொடங்கினர். அவர்களிடம் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று கண்காணிப்பு குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், மாஸ்க் அணியாதவர்கள், கூட்டமாக நிற்பவர்களை எச்சரித்தனர். மேலும் வியாபாரிகள் தங்கள் கடைகளை திறந்து வைத்த நிலையில், அவர்களிடம் சமூக இடைவெளியுடன் பொருட்களை விற்க வேண்டும் என்று கண்காணிப்பு குழுவினர் அறிவுரை வழங்கினர். …
The post மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் மக்கள் குவிந்தனர்: சமூக இடைவெளியுடன் விற்பனை செய்ய கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை appeared first on Dinakaran.