×

மாணவர்கள் நலனை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு தகவல்

சென்னை: மாணவர்களின் நலனை பாதுகாப்பதில் இந்த அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான இலவச சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை தொடங்கப்படவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தின் வாயிலாக சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டு மே 20ம் தேதி முடிவடையும். இந்த ஆண்டு சேர்க்கை தொடங்கப்படாத காரணத்தால் லட்சக்கணக்கான குழந்தைகள் முன் பருவ சேர்க்கையான எல்.கே.ஜி, யூ.கே.ஜி விண்ணப்பம் அளிக்க முடியாத நிலையில் உள்ளனர். ஆனால் இந்த ஆண்டு எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்த திட்டம் முடங்கும் நிலையில் உள்ளது. எனவே, மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டு உடனடியாக தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் அட்வகேட் ெஜனரல் ஜெ. ரவீந்திரன், மாணவர்களின் நலனை பாதுகாப்பதில் தமிழக அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இது தொடர்பாக மனுதாரர் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், வழக்கை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

The post மாணவர்கள் நலனை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Madras High Court ,V. Easwaran ,Revival Movement ,Coimbatore ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...