×

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணை, நீர்த்தேக்கங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி, ஒத்திகை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் அடுத்த வாரத்தில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு :  இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின்படி, தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் ஆகியவற்றில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை கடந்த 7ம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று (10ம் தேதி) சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை, வ. ஊ. சிதம்பரனார் துறைமுக ஆணையம், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையம், தூத்துக்குடி மாவட்டம் ஆகிய இடங்களில் பிற்பகல் 4 மணி முதல் 5 மணி வரை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகையின் போது விமான தாக்குதலை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை குறித்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஒத்திகை போது பாதுகாப்பு, வெளியேற்றம் மற்றும் முதலுதவி தொடர்பான பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் அடுத்த வாரத்தில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்படும். இப்பயிற்சியின் தொடக்கமாக முழு ஒத்திகைக்கான தயாரிப்புகள், கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்படும். பின்னர், வாரத்தின் இரண்டாவது பாதியில் ஆணையர், சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இந்த ஒத்திகை பயிற்சி நேரடியாக நிகழ்த்தப்படும்.

இந்த ஒத்திகை பயிற்சியினை மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் ஒருங்கிணைந்து நடத்தும். இந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையினை சரிபார்த்துக் கொள்வதற்கான ஒரு ஒத்திகை மட்டுமே ஆகும். மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம் போல இயங்கும். இப்பயிற்சி குறித்து பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை.

The post தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணை, நீர்த்தேக்கங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி, ஒத்திகை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Revenue and Disaster Management Department ,Chennai ,Ministry of Home Affairs ,Government of India… ,Dinakaran ,
× RELATED எஸ்.ஐ.ஆர். பணிக்கு கூடுதல் ஆவணங்கள்...