×

துப்பாக்கிச் சுடும் மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு அப்பாவி சிறுவனின் உயிரை பறித்து ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில், பெரம்பலூர் மாவட்ட விவசாயி வீட்டின் மேற்கூரையை துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததாக செய்தி வந்துள்ளது. வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அருகில் உள்ள மலைப் பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் மையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பயிற்சியில் ஈடுபட்டதும், பயிற்சியின் போது அவர்கள் பயன்படுத்திய குண்டுகள் விவசாயி வீட்டின் மேற்கூரையை துளைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.  நல்ல வேளையாக யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்தாலும், இதே காரணத்திற்காக நாம் ஒரு சிறுவனை அண்மையில் இழந்திருக்கின்ற நிலையில், நாரணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பீதியில் உள்ளனர். இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே வலுத்து வருகிறது. எனவே, தமிழக முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து துப்பாக்கிச் சுடும் மையங்கள் மக்களுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்யவும், ஆய்வின் அடிப்படையில் பயிற்சியை மேற்கொள்ளத் தேவையான அனுமதியினை வழங்கவும், ஆய்வின் முடிவு வேறு மாதிரி இருக்கும்பட்சத்தில் துப்பாக்கிச் சுடும் மையத்தினை வேறு இடத்திற்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post துப்பாக்கிச் சுடும் மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pannirselvam ,Pudukkotta District, Narthamalai ,Green Alaypatti ,Narthamalai ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!