சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததற்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், மேல்முறையீட்டு வழக்கில் நடிகர் பிரபு, ராம்குமார் உள்ளிட்டோர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தனர். பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை செலுத்தவில்லை என்பதால் தனபாக்கியம் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த பிரச்னை தொடர்பாக முடிவெடுக்க மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டார்.
மத்தியஸ்தர் விசாரித்து கடனை திரும்ப செலுதுவதற்கு ஏதுவாக ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி மத்தியஸ்தர் கடந்த 2024 மே 4ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி, படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்காததை அடுத்து மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமார் மற்றும் அவரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி அப்துல் குத்தூஸ், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்நிலையில் நடிகர் பிரபு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அன்னை இல்லம் வீடு எனக்கு சொந்தமானது. எனது தந்தை சிவாஜி கணேசன் எனது பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளார். எந்த கடனும் வாங்காத நிலையில் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில், அன்னை
இல்லம் வீட்டின் முழு உரிமையாளர் பிரபு என்று தெரியவந்துள்ளது. எனவே, அவரது வீட்டை ஜப்தி செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து அன்னை இல்லம் வீட்டை மீண்டும் ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.மாலா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவிற்கு தற்போது எந்த தடையும் விதிக்க முடியாது. இந்த மனு குறித்து நடிகர் பிரபு, ராம்குமார் உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 3ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
The post நடிகர் சிவாஜியின் வீட்டை மீண்டும் ஜப்தி செய்யக்கோரி வழக்கு; நடிகர் பிரபு, ராம்குமார் பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.