×

பஹல்காம் தாக்குதலுக்கு மத்தியில் கேதார்நாத் கோயில் நடை திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

ருத்ரபிரயாக்: பஹல்காம் தாக்குதலுக்கு மத்தியில் கேதார்நாத் கோயில் நடை இன்று கோலாகலமாக திறக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உத்தரகாண்ட்மாநிலத்தின் இமயமலை தொடரில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில், 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும், சோட்டா சார் தாம் யாத்ரையின் முக்கிய தலமாகவும் விளங்குகிறது. இந்த கோயில், உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில், மந்தாகினி ஆற்றின் கரையில், 3,583 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-மே மாதங்களில் கோயில் நடை திறக்கப்பட்டு, தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு பிறகு மூடப்படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான சார் தாம் யாத்ரை இன்று தொடங்கியது. முன்னதாக பாதுகாப்பு காரணங்களுக்காக ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு கேதார்நாத் சார் தாம் யாத்திரையை மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைத்தார். அவரும் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

முன்னதாக கோயில் திறப்பு விழாவில், முதன்மை பூசாரியால் மத சடங்குகள் நடத்தப்பட்டன. கோயில் முழுவதும் 13 குவிண்டால் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் திறப்பு விழாவின் போது ஹெலிகாப்டர்கள் மூலம் பக்தர்கள் மீது பூக்கள் தூவப்பட்டன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பக்தர்கள் கேதார்நாத் கோயிலில் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் பஹல்காம் தாக்குதல் நடந்துள்ள நிலையில், கேதார்நாத் கோயில் திறக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

The post பஹல்காம் தாக்குதலுக்கு மத்தியில் கேதார்நாத் கோயில் நடை திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Pahalgam ,Rudraprayag ,Kedarnath ,Himalayan ,Uttarakhand ,12 Jyotirlingas ,Chhota Char Dham… ,
× RELATED டெல்லி எய்ம்ஸில் ஜெகதீப் தன்கர் அனுமதி