- திமுக
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- யூனியன் அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- யூனியன்…
- தின மலர்
சென்னை: ஒன்றிய அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளதையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: மிகவும் தேவையான சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தவிர்க்கவும் தாமதிக்கவும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றதால், ஒரு வழியாக ஒன்றிய பாஜக அரசு அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
ஆனால், முக்கியமான வினாக்களுக்கு இன்னும் விடையில்லை. இந்தக் கணக்கெடுப்பு எப்போது தொடங்கும், எப்போது முடிவுறும்? இவர்கள் இதனைத் தற்போது அறிவித்திருப்பது ஒன்றும் தற்செயலானது அல்ல. பீகார் மாநிலத் தேர்தலில் சமூகநீதி விவகாரம் ஓங்கி ஒலிப்பதால்தான், சந்தர்ப்பவாத நடவடிக்கையாக தற்போது இதனை அறிவித்திருக்கிறார்கள். நாம் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் கோரியபோது, மக்களைப் பிளவுபடுத்துகிறார்கள் என நம் மீது குற்றம்சாட்டிய அதே பிரதமர், அவர் தொடர்ச்சியாகத் தூற்றிய அதே கோரிக்கைக்கு இப்போது பணிந்துவிட்டார்.
முறையாகத் திட்டங்களை வகுப்பதற்கும், மக்கள்நலத் திட்டங்கள் சரியான பயனாளிகளைச் சென்றடைவதற்கும், மெய்யான சமூகநீதியை அடையவும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இன்றியமையாததாகும். அநீதிக்குத் தீர்வு காணவேண்டுமென்றால் முதலில் அதன் அளவை அறிந்தாக வேண்டும். இன்றைய அறிவிப்பு தமிழ்நாடு அரசும் திராவிட முன்னேற்றக் கழகமும் போராடிப் பெற்ற வெற்றி ஆகும். முதன் முதலாக நாம் தான் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்.
அனைத்துத் தளங்களிலும் இதனை வலியுறுத்தினோம். ஒவ்வொரு முறை பிரதமரை நேரில் சந்திக்கும் போதும், பலமுறை கடிதங்கள் எழுதியும் இதனை ஒன்றிய அரசு தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினோம். மாநில அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கலாம் எனச் சிலர் கோரியபோது கூட, நாம்தான் உறுதியாகச் சொன்னோம்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் பொறுப்பு ஒன்றிய அரசு தான் இதனை நாடு தழுவிய அளவில் மேற்கொள்ள முடியும், அதுதான் சென்சஸ் சட்டப்படி சட்டரீதியாகவும் செல்லும் என்றோம். நமது நிலைப்பாடு சரி என இன்று நிறுவப்பட்டுள்ளது. திராவிட மாடலின் வழியே சமூகநீதிக்கான எங்கள் பயணத்தில் திமுகவுக்கும், நாம் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும், இது மற்றுமொரு வெற்றியாகும். இவ்வாறு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.
The post சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு சமூக நீதிக்கான பயணத்தில் திமுகவுக்கு மற்றுமொரு வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு appeared first on Dinakaran.
