×

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் விரைவில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி: சோதனை ஓட்ட ஏற்பாடுகள் தீவிரம்

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன. ரூ.3.87 கோடி செலவில் பசுமை ஹைட்ரஜன் செயல்முறை ஆலை, உற்பத்தி, சேமிப்பு மற்றும் மின்உற்பத்தி அமைப்பு நிறுவப்பட்டு உள்ளன. இதில் விரைவில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட உள்ளது. தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை பசுமை துறைமுகமாக மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.18 கோடி செலவில் 2 மெகாவாட் காற்றாலை, ரூ.1.46 கோடி செலவில் 400 கிலோ வாட் மேற்கூரை சூரிய மின்னாலை அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.4.90 கோடி செலவில் ஒரு மெகாவாட் தரைதள சூரிய மின்னாலை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. மேலும் தூத்துக்குடி துறைமுகத்தை பசுமை ஹைட்ரஜன் முனையமாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் பிரித்து எடுக்கப்பட்டு திரவ வடிவில் சேமிக்கப்படுகிறது.

இந்த பசுமை ஹைட்ரஜன் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. மின்சார உற்பத்தியிலும் பசுமை ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. அதற்கான பிரத்யேகமான பியூல் செல்லுக்குள் செலுத்தி, ஹைட்ரஜன் உடைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தியாகிறது. இந்த மின்சார உற்பத்தியின் போது, மாசு ஏற்படுத்தக்கூடிய எந்தவிதமான பொருளும் வெளியாகாது என்று கூறப்படுகிறது. இந்த பசுமை ஹைட்ரஜனை சிலிண்டர்களில் நிரப்பி எளிதில் கொண்டு செல்ல முடியும். இதனால் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் அதன் மூலம் மின்சார உற்பத்தியும் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன.

அதன்படி ரூ.3.87 கோடி செலவில் பசுமை ஹைட்ரஜன் செயல்முறை ஆலை, உற்பத்தி, சேமிப்பு மற்றும் மின்உற்பத்தி அமைப்பு நிறுவப்பட்டு உள்ளது. இதில் விரைவில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட உள்ளது. சோதனை ஓட்டத்தின் போது, மணிக்கு 10 நியூட்டன் மீட்டர் அளவு கொண்ட பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த பசுமை ஹைட்ரஜனில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து, துறைமுக குடியிருப்புகள், தெருவிளக்குகள், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களுக்கு மின்சாரம் வழங்க வஉசி துறைமுகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மாற்று சக்தி மற்றும் கார்பன் குறைக்கும் நோக்கத்துடன் வ.உ.சி துறைமுகம் இந்த நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

 

The post தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் விரைவில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி: சோதனை ஓட்ட ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi VOC Port ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...