சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணி வழங்கியதில், அரசுக்கு ரூ.40 லட்சத்துக்கு மேல் இழப்பீடு நடந்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் நூலகர், உடற்கல்வி இயக்குனரிடம் விஜிலென்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஒரு பக்கம் போலீசாரும், இன்னொரு பக்கம் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு பிரிவில் பெரியார் பல்கலைக்கழகம் மீது மோசடி, ஊழல் தொடர்பாக 10க்கும் மேற்பட்ட புகார்கள் உள்ளது.
இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களில் ஒரு பிரிவினருக்கு பதிலாக இன்னொரு பிரிவினருக்கு, இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணி வழங்கியது, அவர்களுக்கான ஊதியம் வழங்கியது என ரூ.40 லட்சத்திற்கு மேல் பல்கலைக்கழகத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
மேலும் லஞ்சம் பெற்று பணி நியமனம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இப்புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி, பெரியார் பல்கலைக்கழகத்தின் நூலகர் ஜெயப்பிரகாஷ், உடற்கல்வி இயக்குனர் வெங்கடாசலம் ஆகியோரிடம், நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.
அடுத்த கட்டமாக பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆடிட்டர், துணைவேந்தர் ஜெகநாதனிடமும் விசாரணை நடத்தப்படும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
The post அரசுக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு புகார் பெரியார் பல்கலை நூலகர் இயக்குனரிடம் விசாரணை: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி appeared first on Dinakaran.