- சிவசுப்ரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்
- தர்மபுரி
- பங்குனி உத்திர தேரோட்டம் திருவிழா
- தர்மபுரி அன்னசாகரம்
- சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்
தர்மபுரி, ஏப்.12¬: தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தது. பின்னர் ஆட்டுக்கடா வாகனத்தில் சுவாமி உற்சவம் நடந்தது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் வழிபாடுகள் நடந்தது. மேலும், பால்குட ஊர்வலம் மற்றும் சுவாமி சிறப்பு ஆராதனை வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து வள்ளி -தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தோரணவாயில் ஊஞ்சல் சேவை மற்றும் மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலா நடந்தது.
நேற்று முன்தினம் விநாயகர் தேரோட்டமும், யானை வாகன உற்சவமும் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது. விழாவையொட்டி காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி மகாரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து பெண்கள் மட்டும் நிலை பெயர்க்கும் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து நிலை பெயர்த்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை பொதுமக்கள் வடம் பிடிக்கும் தேரோட்டம் நடந்தது. விழாவையொட்டி, கோயில் வளாகம் மற்றும் செங்குந்தர் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று(சனிக்கிழமை) வேடர்பறி உற்சவமும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொடி இறக்கம், மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பல்லக்கு உற்சவமும் நடக்கிறது. நாளை மறுநாள்(திங்கட்கிழமை) சயன உற்சவமும், வரும் 15ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. விழாவையொட்டி தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் விழா குழுவினர், செங்குந்தர் சமூகத்தினர் செய்துள்ளனர்.
The post சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் appeared first on Dinakaran.