திருவாரூர், ஏப்.4: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பெய்த சாரல் மழை காரணமாக வெப்பம் குறைந்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காலமானது அக்டோபர் மாதம் 3வது வாரத்தில் துவங்கி டிசம்பர் மாதம் இறுதி வரையில் மழை பெய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
அதன்பின்னர் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பனிபொழிவு இருந்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை என்பது அக்டோபர் முதல் வாரத்திலேயே துவங்கி பெய்த நிலையில் இந்த பருவமழை காரணமாக மாநிலத்தின் தலைநகரான சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட பெரும்பாலான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.
மேலும் வங்ககடலில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலு£ர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ததால் இதன்காரணமாகவும் வெள்ளபெருக்கும் ஏற்பட்டது. மேலும் இந்த புயல் சின்னம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் சம்பா நெற்பயிர்களும் பாதிக்கப்பட்டன.
அதன்பின்னர் இந்த வடகிழக்கு பருவமழையானது டிசம்பருடன் முடிவுக்கு வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதத்திலும் அவ்வப்போது ஒருசில நேரங்களில் மழை பெய்ததன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாரான சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. அதன்பின்னர் ஒரு மாத காலம் வரையில் மாவட்டத்தில் தினந்தோறும் சுமார் 85 முதல் 87 டிகிரி வரையில் வெயில் அடித்து வந்த நிலையில் இரவு நேரங்களில் கடும் பனிபொழிவும் இருந்து வந்தது.
பின்னர் கடந்த மாத துவக்கத்தில் தொடர்ந்து 3 நாட்கள் வரையில் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக சம்பா அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. அதன் பின்னர் கடந்த ஓரு மாத காலமாக மாவட்டத்தில் தினம்தோறும் 90 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று காலையும் வழக்கம் போல் வெயில் அடித்த நிலையில் அதன் பின்னர் மேகமூட்டம் ஏற்ப்பட்டு திருவாரூர், திருத்துறைபூண்டி, நன்னிலம் உட்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்ததது.
இதன் காரணமாக வெப்பம் குறைந்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் வழிமண்டல சுழற்சி காரணமாக இன்றும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் மாவட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பச்சை பயிறு மற்றும் உளுந்து பயிர் அறுவடை பணிகள் பாதிக்கப்படும் அபாயம் இருந்து வருவதால் விவசாயிகள் கவலையில் இருந்து வருகின்றனர்.
The post திருவாரூர் மாவட்டத்தில் சாரல் மழை appeared first on Dinakaran.
