வருசநாடு ஏப். 4: வருசநாடு அருகே சின்னச்சுருளி அருவியில் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. வருசநாடு அருகே கோம்பைத்தொழு சின்னச்சுருளி அருவி அமைந்துள்ளது. நீர்வரத்து உள்ள நாட்களில் சிவகங்கை மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து செல்வது வழக்கம். அருவியில் தடுப்பு கம்பிகள் இல்லாத காரணத்தால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாற்ற சூழலில் குளிக்க வேண்டிய நிலை காணப்பட்டது.
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பாக குளித்து மகிழ்வதற்காக அருவியின் கீழ் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சிறிய அளவிலான குளியல் தொட்டி கட்டப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் தற்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனால் குழந்தைகள் அருவியில் பாதுகாப்பாற்ற நிலையில் குளித்து வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சின்னச்சுருளி அருவியில் குளியல் தொட்டி பயன்பாட்டிற்கு வருமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.