×

3 குடிநீர் பகிர்மான நிலையங்கள் நாளை மறுநாள் செயல்படாது: வாரியம் அறிவிப்பு

சென்னை, மார்ச் 27: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் வரும் 29ம்தேதி காலை 10 மணி முதல் 30ம்தேதி காலை 10 மணி வரை (24 மணி நேரம்) வள்ளுவர்கோட்டம் குடிநீர் பகிர்மான நிலையம், தென்சென்னை குடிநீர் பகிர்மான நிலையம் மற்றும் கீழ்ப்பாக்கம் குடிநீர் பகிர்மான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படும்.

எனவே, மண்டலம்-9 (தேனாம்பேட்டை), மண்டலம்-10 (கோடம்பாக்கம்) மற்றும் மண்டலம்-13 (அடையாறு)-க்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் (டயல் பார் வாட்டர்) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் < https://cmwssb.tn.gov.in > என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 3 குடிநீர் பகிர்மான நிலையங்கள் நாளை மறுநாள் செயல்படாது: வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Drinking Water Board ,Chennai Metro Rail Corporation ,Teynampet ,Nungambakkam Utthamar Gandhi Salai ,Sterling Road.… ,Dinakaran ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்