பாடாலூர், மார்ச் 25: அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி, துண்டுப் பிரசுரங்கள் வழங்கல் உள்ளிட்ட நிகழ்வுகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பிலிமிசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
பேரணியை பள்ளித் தலைமையாசிரியை அமிர்தம் தொடங்கி வைத்தார். அதில், பள்ளி மாணவர்கள் பங்கேற்று பள்ளியில் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பதாகைகள் ஏந்தியும், குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதால், கிடைக்கும் பயன்கள், 5 வயது நிரம்பிய குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்போம், எண்ணும் எழுத்தும் செயல்பாடுகள் உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணி முக்கிய தெருக்களின் வழியாக சென்று இறுதியில் பள்ளியை வந்தடைந்தது. இதில், ஆசிரியர்கள் கந்தசாமி, ராமகிருஷ்ணன், உமா, கொளஞ்சிநாதன், சிவராஜ், ரேவதி, கணினி பயிற்றுநர் சுகந்தி, இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பிலிமிசை அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.