×

மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜ தலைவர் அண்ணாமலை எச்.ராஜா மீது வழக்கு: சேலம் போலீசார் நடவடிக்கை


சேலம்: மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோர் மீது சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பியூஸ் (42). இவர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் எச்.ராஜா ஆகியோர் மீது சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினவிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், மதுரை அருகேயுள்ள திருப்பரங்குன்றம் முழுவதும் முருகனுக்கு சொந்தமானது, அங்கிருக்கும் தர்கா ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், இதுதொடர்பாக லண்டன் நீதிமன்றம் 1931ம் ஆண்டு தீர்ப்பு கூறி இருக்கிறது என மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளனர்.

மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இவ்வாறு பரப்பி வருகின்றனர் என கூறியிருந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று மாநகர சைபர் கிரைம் போலீசார், அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து பியூஸ் கூறியதாவது: தமிழ்நாட்டில் மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோர் தொடர்ந்து பொய்யான தகவல்களையே பரப்பி வருகின்றனர். தற்போது திருப்பரங்குன்றம் மலை விவகாரத் திலும் பொய்யான தகவலை கூறியதற்காக சேலம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒற்றுமையாக இருக்கும் மக்களிடையே கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் அண்ணாமலை செயல்படுகிறார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜ தலைவர் அண்ணாமலை எச்.ராஜா மீது வழக்கு: சேலம் போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : BJP ,Annamalai H. Raja ,Salem ,Tamil Nadu ,Annamalai ,H. Raja ,Piyush ,
× RELATED அம்பேத்கர் சிலைக்கு மாலை...