சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். கடந்த 2006 – 2011-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத் துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீதான இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீதான இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை வந்தபோது, அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி ஆகியோர் நிர்வாக இயக்குனர்களாக உள்ள மருத்துவமனை மற்றும் நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த கூடுதல் குற்றபத்திரிகை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வேலவன், கூடுதல் குற்றபத்திரிகையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தார்.
அதன்படி, அமைச்சர் பொன்முடி, அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அமைச்சராக இருப்பதால் அடுத்த கட்ட விசாரணைகளுக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரி பொன்முடி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை தரப்பில் பதிலளிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், பிணை பத்திரம் தாக்கல் செய்வதற்காக வழக்கின் விசாரணை பிற்பகலுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
The post அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு; சிபிஐ நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்: நேரில் ஆஜராக விலக்களிக்க கோரி மனு தாக்கல் appeared first on Dinakaran.