×

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் திருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம் ேகாலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்தனர்

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் மாசித்திருவிழா தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடந்தது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். திருச்செந்தூரில் மாசித்திருவிழா கடந்த 3ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 8ம் திருவிழாவான நேற்று முன்தினம் சுவாமி வெள்ளை சாத்தி வெள்ளிச் சப்பரத்திலும், பச்சை சாத்தி கடைசல் சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து, நேற்று காலை கோயிலை வந்தடைந்தார்.

தொடர்ந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் மற்றும் அலைவாயுகந்தபெருமான் தனித்தனி வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். 9ம் திருவிழாவான நேற்று பகலில் சுவாமி பல்லக்கிலும், இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதை முன்னிட்டு அதிகாைல 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 7 மணிக்கு பிள்ளையார் தேர் புறப்பட்டு 7.45 மணிக்கும், காலை 7.50 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து நிலைக்கு வந்தது.

பின்னர் தெய்வானை அம்மன் தேரில் எழுந்தருளி வீதியுலா வந்து நிலைக்கு வந்தது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடியபடி வந்தது. இதனால் திருச்செந்தூரே திக்கு முக்காடியது. முக்கிய வீதிகள் வழியாக தேர் வீதியுலா வந்து காலை 10.50 மணிக்கு கோயில் நிலையை அடைந்தது. பாதுகாப்பு பணிகளில் திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில் போலீசாரும், ஊர் காவல்படையினரும், மின் வாரிய ஊழியர்களும் ஈடுபட்டனர். திருச்செந்தூர் நகராட்சி பணியாளர்கள் சுகாதாரப்பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் வசதிக்காக சுகாதாரம், குடிநீர் வசதி, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு கருதி தீயணைப்புத்துறை வீரர்கள் வாகனங்களுடனும், மருத்துவ அவசர ஊர்தியும் தயார் நிலையில் இருந்தன. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

The post வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் திருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம் ேகாலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்தனர் appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Masi Thiruvizh festival chariot procession ,Masi Thiruvizh festival chariot ,Masi Thiruvizh festival ,Lord ,Goddess ,
× RELATED திருச்செந்தூர், உடன்குடியில் கிணற்றில் விழுந்த ஆடு, பாம்பு மீட்பு