தஞ்சாவூர், மார்ச் 12: அம்மாபேட்டை பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை கண்டித்தும் நடவடிக்கை எடுக்க கோரியும் நெசவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கத்தில் உள்ள பட்டுப் புடவைகளின் தரத்தை ஆய்வு செய்திடவும், சங்க உறுப்பினர்களின் சிறுசேமிப்பு பணத்தை தாமதமின்றி உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும்.
அதேபோல் சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திட வேண்டும். பாவு, பட்டு, ஜரிகை வழங்கிடவும், நிர்வாகத்தின் வரவு செலவு முறைகேடுகளை விசாரிக்க வேண்டும். அம்மாபேட்டை தென்றல் நகரில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம் கட்டுமானம் தரமற்ற முறையில் உள்ளதை ஆய்வு செய்ய வேண்டும்.
சங்கத்திற்கு புதிதாக விற்பனை கட்டிடத்தை கட்டிக் கொடுக்கவும், சங்கத்தில் தேங்கியுள்ள பட்டு ஜவுளிகளை கோ-ஆப்டெக்ஸ் முலம் கொள்முதல் செய்திடவும், கூட்டுறவு சங்கங்களுக்கு தாமதமின்றி தேர்தல் நடத்திடவும் வலியுறுத்தி, அம்மாபேட்டை பட்டு கைத்தறி நெசவாளர் சங்கம் முன்பு ஏஐடியூசி கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் ராஜாராமன் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொ.மு.ச நிர்வாகிகள் அனந்தராமன், மாதவன், லட்சுமணன், ஏஐடியூசி மாவட்ட நிர்வாகிகள் நாகராஜன் செந்தில்குமார், ஹரிகிருஷ்ணன், ராமதாஸ் உள்ளிட்ட நெசவாளர்கள் பங்கேற்றனர்.
The post கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.