புதுடெல்லி: திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி நேற்று எழுப்பிய கேள்வியில், “இந்திய விளையாட்டுத் துறையில் பாலின ஊதிய இடைவெளி குறித்து ஒன்றிய அரசு அறிந்திருக்கிறதா? அப்படியானால், விளையாட்டு வாரியாக பெண்கள் மற்றும் ஆண்கள் பெறும் சராசரி ஊதியம் குறித்த விவரங்கள் என்ன? பெண் விளையாட்டு வீரர்களுக்கான வளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு, ஆண் விளையாட்டு வீரர்களுக்கு சமமாக ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
அப்படியானால் அதன் விவரங்கள் என்ன? பெண்கள் விளையாட்டு போட்டிகளுக்கு ஊடக பிரதிநிதித்துவம் மற்றும் ஸ்பான்சர்ஷிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் என்ன? மற்றும் நாட்டில் பாலின ஊதிய இடைவெளியை குறைப்பதற்கும், வீராங்கனைகளுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் குறிப்பிட்ட சட்ட அல்லது கொள்கை மாற்றங்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதா? என்று கேட்டிருந்தார்.
அதற்கு ஒன்றிய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ஆண், பெண் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் ஒரேமாதிரியான வேலை அல்லது ஒரே மாதிரியான பணிக்காக ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம ஊதியம் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், அரசாங்கம் சம ஊதிய சட்டம் 1976-ஐ இயற்றியுள்ளது. விளையாட்டு என்பது மாநில பட்டியலாக இருப்பதால், நாட்டில் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஊக்குவிப்புக்கான முதன்மைப் பொறுப்பு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை சார்ந்தது ஆகும் ” என்றார்.
The post வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் கிடைக்கிறதா? மக்களவையில் கனிமொழி எம்.பி கேள்வி appeared first on Dinakaran.
