×

கோடை சீசன் நெருங்கிய நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பெரணி இல்லத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரம்

ஊட்டி : கோடை சீசன் நெருங்கி நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் பெரணி இல்லத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும். மேலும், பல ஆயிரம் தொட்டிகளில் மலர்கள் நடவு செய்யப்பட்டு அவைகள் அனைத்தும் கண்ணாடி மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு செல்கின்றனர். இது தவிர பூங்காவில் பல லட்சம் பெரணி செடிகள் வைக்கப்பட்டுள்ள பெரணி இல்லம் (கண்ணாடி மாளிகை) உள்ளது.

மேலும், பல்லாயிரம் கள்ளிச்செடிகள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை மேல் கார்டன் பகுதியில் உள்ளது. இவைகள் இரண்டும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது அமைக்கப்பட்ட கண்ணாடி மாளிகை. பூங்காவில் உள்ள பெரணி இல்லம் மற்றும் கள்ளிச்செடிகள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை இரண்டுமே வலுவிழந்து சேதம் அடைந்தன.

இதன் மேற்கூரைகளில் உள்ள கண்ணாடிகள் அவ்வப்போது விழுந்து வந்தன. சுற்றுலாப் பயணிகள் இந்த கண்ணாடி மாளிகைக்குள் செல்லும்போது மேற்கூரையில் உள்ள கண்ணாடிகள் விழுந்தால் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து ஏற்படும் என்ற நோக்கில் இருந்த கண்ணாடி மாளிகைகளும் மூடப்பட்டன.

இந்நிலையில், இந்த கண்ணாடி மாளிகைகளை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும், பழமை மாறாமல் இந்த கண்ணாடி மாளிகைகளை சீரமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த கண்ணாடி மாளிகைகள் சீரமைப்பதற்கான பணிகளை தோட்டக்கலைத் துறை துவக்கியது.

முதற்கட்டமாக ஊட்டி மேல் கார்டன் பகுதியில் அமைந்துள்ள கள்ளிச் செடிகள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி மாளிகையை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கள்ளிச்செடிகள் மற்றும் பெரணி செடிகளை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது பூங்கா நுழைவுப்பகுதியில் உள்ள பெரணி இல்லம் கண்ணாடி மாளிகை சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகிறது. கோடை சீசன் நெருங்கி உள்ள நிலையில் இந்த கண்ணாடி மாளிகை சீரமைப்பு பணிகளை பூங்கா நிர்வாகம் வேகப்படுத்தி உள்ளது . இந்த கண்ணாடி மாளிகையில் உள்ள மேற்கூறையில் இருந்த அனைத்து கண்ணாடிகளும் அகற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பக்கவாட்டில் உள்ள அனைத்து கண்ணாடிகளும் அகற்றப்பட்டு, புதிதாக சாரங்கள் அமைக்கப்பட்டு அதில் கண்ணாடிகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் கோடை சீசனுக்குள் பணிகளை முடித்து கோடையில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், கண்ணாடி மாளிகையை காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கோடை சீசன் நெருங்கிய நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பெரணி இல்லத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : State Botanical ,Garden Perani House of ,Nudi ,FERANI ,HOUSE ,FEEDER BOTANICAL PARK ,Ooty ,State Botanical Garden Perani House of Ooty ,Dinakaran ,
× RELATED ஜனப்பசத்திரம், அழிஞ்சிவாக்கம்...