ஆவடி: தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரூ.3 ஆயிரம் பணத்துடன் மணிபர்சை திருடிய கொள்ளைக்காரியை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆவடி பருத்திப்பட்டு லட்சுமி நகரை சேர்ந்தவர் ராமு (33). இவர் தி.நகர் நங்கராதன் தெருவில் உள்ள பிரபல ஜவுளிக்கடைக்கு நேற்று முன்தினம் துணி எடுக்க வந்தார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. சிறிது நேரத்தில் தனது பேன்ட் பையில் வைத்திருந்து ரூ.3 ஆயிரம் பணத்துடன் மணிபர்ஸ் மாயமானது. மணிபர்சில் ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தது. உடனே இதுகுறித்து ராமு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின்படி போலீசார், பணம் திருடப்பட்ட ஜவுளிக்கடைக்கு வந்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளைக்காரியான சாந்தி (எ) தில்சாத் (54) என்பவர் ராமுவுடன் இருந்து அவசரமாக வெளியேறி காட்சிகள் பதிவாகி இருந்தது. அதைதொடர்ந்து போலீசார் அதிரடியாக சாந்தி(எ) தில்சாத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து மணிபர்ஸ் மற்றும் ரூ.3 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சாந்தி மீது 21 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
The post தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஜவுளிக்கடையில் கூட்டநெரிசலில் பணத்துடன் மணிபர்ஸ் திருட்டு: 21 வழக்கில் தொடர்புடைய பிரபல கொள்ளைக்காரி கைது appeared first on Dinakaran.
