மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஏற்கெனவே 8 விமான சேவைகள் நடந்து வருகின்றன. வரும் 30ம் தேதி முதல் இந்த விமான சேவைகள் 12 ஆக அதிகரிக்கப்படுகிறது. அதேபோல் திருச்சிக்கு வரும் 22ம் தேதி முதல் 16 விமான சேவைகளாக அதிகரிக்க திட்டமிட்டு உள்ளதாக சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதற்கு விமான பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களுக்கு தற்போது அதிகளவு பயணிகள் விமானம் மூலமாக சென்று வருகின்றனர். அப்பகுதிகளில் போதிய வசதி இல்லாததால், அங்கு செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளில் வார இறுதி நாட்களில் விமான கட்டணங்களுக்கு இணையாக அதிகளவு பணத்தை வசூலித்து வருகின்றனர். இதில் அதிக கட்டணம் கொடுத்து பலமணி நேரம் பயணிப்பதைவிட, விமானங்களிலேயே பயணம் செய்துவிடலாம் என்று ஏராளமான பயணிகள் கருதுகின்றனர். இதனால் சென்னை விமானநிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, சேலம், தூத்துக்குடி செல்லும் விமானங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.
சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து ஏற்கனெவே தூத்துக்குடிக்கு நாள்தோறும் வருகை, புறப்பாடு என 8 விமான சேவைகள் நடந்து வருகின்றன. இவ்விமானங்களில் பண்டிகை தினங்களில் டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இடையே வரும் 30ம் தேதி முதல் 12 விமான சேவைகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் சென்னை-தூத்துக்குடிக்கு இடையே நாள்தோறும் 12 விமானங்கள் இயக்கப்படும். இதில் சென்னை-தூத்துக்குடி இடையே 6 விமானங்களும், தூத்துக்குடி-சென்னை இடையே 6 விமானங்களும் இயக்கப்படுகிறது.
இதேபோல் சென்னை-திருச்சிக்கு இடையே செல்லும் விமானங்களிலும் பயணிகளின் கூட்டம் அதிகரித்து உள்ளது. தற்போது நாள்தோறும் சென்னையில் இருந்து திருச்சிக்கு இடையே வருகை, புறப்பாடு என 14 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வரும் 22ம் தேதி சென்னை-திருச்சி இடையே 16 விமான சேவைகளாக அதிகரிக்கப்படுகிறது. இதன்மூலம் அன்று முதல் சென்னையில் மாலை 6.45 மணியளவில் திருச்சிக்கு புறப்பட்டு, இரவு 7.45 மணியளவில் தரையிறங்கும். பின்னர் அங்கிருந்து இரவு 8.15 மணியளவில் புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு சென்னை வந்து சேரும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். தூத்துக்குடி, திருச்சி விமான சேவைகள் அதிகரிப்புக்கு ஏராளமான பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
The post சென்னை விமானநிலையத்தில் இருந்து திருச்சி, தூத்துக்குடிக்கு கூடுதல் விமான சேவைகள்: பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.