புதுடெல்லி: குடியரசு துணைத்தலைவர் தன்கர்(73) நெஞ்சு வலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கருக்கு நேற்று அதிகாலை லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. மேலும் அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு இதயவியல் துறைத்தலைவர் டாக்டர் ராஜீவ் நாரங்கன் தலைமையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தன்கரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், மருத்துவர்கள் குழு தொடர்ந்து அவரை கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று தன்கரின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
அவரை தொடர்ந்து நேற்று பிற்பகல் பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று தன்கரை நேரில் சந்தித்தார். பின்னர் தன்கரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் மோடி தன் எக்ஸ் பதிவில், “எய்ம்ஸ் மருத்துவமனை சென்று ஜெகதீப் தன்கரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தேன். தன்கர் விரைவில் குணமடைந்து, நல்ல ஆரோக்கியத்துடன் மீண்டு வர பிரார்த்திக்கிறேன்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
The post குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் நெஞ்சுவலியால் எய்ம்சில் அனுமதி: பிரதமர் மோடி நலம் விசாரித்தார் appeared first on Dinakaran.