பெரம்பூர்: பெரம்பூர் துளசிங்கம் தெருவில் தனியாருக்கு சொந்தமான பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்வதற்காக செந்தில்குமார் என்பவரை கடந்த 2023ம் ஆண்டு பள்ளி நிர்வாகம் வேலைக்கு அமர்த்தியது. இவரது செயல்பாடுகளில் திருப்தி இல்லாத காரணத்தினால் பள்ளி நிர்வாகம் ஒரே மாதத்தில் இவரை பணியில் இருந்து நீக்கிவிட்டது.
பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு பள்ளியின் தாளாளர் சீனிவாசன் மற்றும் கணக்காளர் சுசிலா தான் காரணம் என நினைத்து செந்தில்குமார் அவர்களை கண்டித்து பள்ளி நிர்வாகத்தினருக்கு மின்னஞ்சல் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தவறான கருத்துக்களை பரப்பி உள்ளார். இதுகுறித்து ஏற்கனவே பள்ளித் தாளாளர் சீனிவாசன் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், செந்தில்குமாரை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு சில காலம் அமைதி காத்த செந்தில்குமார் மீண்டும் நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கு வந்து பள்ளி நிர்வாகிகளை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளியின் தாளாளர் சீனிவாசன் செம்பியம் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் செம்பியம் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி தலைமையிலான போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, பெரம்பூர் துலசிங்கம் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (45) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து, அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post வேலையில் இருந்து நீக்கியதால் ஆத்திரம் பள்ளி நிர்வாகிகள் குறித்து வலைதளங்களில் அவதூறு: முன்னாள் ஊழியர் கைது appeared first on Dinakaran.