- சென்னை பல்கலைக்கழகம்
- சென்னை
- கிறித்துவம்
- சுப்பிரமணிய ஐயர் அறக்கட்டளை
- சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை
- தின மலர்
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவத்தை பரப்புவது தொடர்பான சொற்பொழிவு நடத்துவதாக எழுந்த சர்ச்சையை அடுத்து அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. சென்னை பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில் சுப்ரமணிய ஐயர் அறக்கட்டளை சொற்பொழிவு நடத்தப்பட இருந்தது. அதன்படி 2024-25-ம் கல்வியாண்டுக்கான சொற்பொழிவு இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை பரப்புவது எப்படி, இந்த மார்க்கம் ஏன் தேவை ஆகிய தலைப்புகளில் வரும் மார்ச் 14ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் பிற்பகல் 2 முதல் 5 மணி வரை நடத்தப்படவிருந்த இந்நிகழ்வில் பொறியாளர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்ற இருந்தார். நிகழ்ச்சியை துறையின் தலைவர் (பொறுப்பு) சவுந்தரராஜன் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு கல்வியாளர்கள், பேராசிரியர்கள், வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.
பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் மதம் பரப்புவது குறித்த கருத்தரங்கம் நடத்தப்படுவது மாணவர்கள் மத்தியில் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் எனவும் பேஸ்புக், டிவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. மேலும், இந்த நிகழ்ச்சியை ரத்து செய்து, அதற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதுதவிர நிகழ்ச்சி தொடர்பாக விளக்கம் கேட்டு சென்னை பல்கலைக்கழகத்துக்கு ஆளுநர் மாளிகை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் விவகாரம் சர்ச்சையானது.
இதற்கு விளக்கம் அளித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை, ஆளுநரின் தனிச் செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், “பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சுப்ரமணிய ஐயர் அறக்கட்டளை சொற்பொழிவை நடத்துவதற்கு பல்கலைக்கழகத்திடம் முறையான அனுமதி பெறப்படவில்லை. எனவே, இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு சம்மந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து நிர்வாக காரணங்களுக்காக சுப்ரமணிய ஐயர் அறக்கட்டளை சொற்பொழிவு ரத்து செய்யப்படுவதாக தொல்லியல் துறை தலைவர் சவுந்திரராஜன் அறிவிப்பு வெளியிட்டார்.
* இதுகுறித்து சென்னை பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவர் கூறுகையில், இவ்வளவு பழமையான பல்கலைக் கழகத்தில் அனுபவமிக்க பேராசிரியர்கள் பலரும் பணிபுரிந்து வருகின்றனர். துறை தலைவர் கவனத்திற்கு இது வரவில்லை என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒரு துறை தலைவரின் அனுமதியை கூட பெறாமலா சொற்பொழிவுக்கு அழைப்பிதழ் தயார் செய்திருப்பார்கள் என்ற கேள்வி எல்லோருக்கும் ஏற்படுகிறது.
தொடர்ந்து இதுகுறித்தான விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் ஏற்படாமல் பல்கலைக் கழகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே துணைவேந்தர் இல்லாமல் இந்த பல்கலைக் கழக நிர்வாகம் முறையாக செயல்படவில்லை. தற்போது இதுபோன்ற சர்ச்சைகளால் பல்கலைக் கழகம் மேலும் பல சோதனைகளை சந்திக்க நேரிடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post சென்னை பல்கலையில் மத சொற்பொழிவு நிகழ்ச்சி ரத்து: ஆளுநர் மாளிகை நோட்டீஸ்: துணைவேந்தர் இல்லாததால் நிர்வாகம் முறையாக இல்லை appeared first on Dinakaran.