×

போக்சோ குற்றவாளிகள் விடுதலையானால் தாமதமின்றி மேல்முறையீடு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுரை: மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் டிஜிபிக்கு கடிதம்

சென்னை: போக்சோ உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளின் விடுதலையை எதிர்த்து உரிய சட்ட கருத்துகளை பெற்று உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று புலன் விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு டிஜிபிக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார். மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘சமீபத்தில் ஒரு வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஒரு குற்றவாளியை போக்சோ சட்டத்தின்கீழ் விடுதலை செய்துள்ளது.

அந்த நீதிமன்றம் அளித்த தீர்பில், இந்திய தண்டனை சட்டத்தின்படியான குற்றங்களுக்காக மட்டுமே குறைந்தபட்ச சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. போக்சோ சட்டத்தின்கீழ் பதிவான வழக்கு ரத்து செய்யப்படுகிறது’ என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து குற்றவாளி செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், போக்சோ குற்றங்களிலிருந்து குற்றவாளியை விடுதலை செய்ததில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி இதில் அரசு மேல்முறையீடு செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரசு குற்றவியல் வழக்கறிஞரிடம் கேட்டதுடன் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது.

எனவே, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்திற்கான போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில் விசாரணை நீதிமன்றம், ஒரு குற்றவாளியை விடுதலை செய்தால் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி மற்றும் அரசு குற்றவியல் சிறப்பு வழக்கறிஞர்கள் சிறப்பு கவனம் செலுத்தி தீர்ப்பு கிடைத்ததும், அதன் விவரத்தை மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

இந்த வழக்குகளில் மேல்முறையீடு செய்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என்கிற சட்ட ஆலோசனை பெற்று மேல் முறையீடு செய்வதற்கு உகந்த வழக்குகளில் கால தாமதமின்றி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளுக்கும் சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கும் அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

The post போக்சோ குற்றவாளிகள் விடுதலையானால் தாமதமின்றி மேல்முறையீடு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுரை: மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் டிஜிபிக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : State Chief ,DGP ,Chennai ,Chief Criminal ,POCSO ,State ,Criminal ,Dinakaran ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?