×

இடைக்கழிநாடு பேரூராட்சியில் காவல் நிலையம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

செய்யூர், மார்ச் 8: இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதிக்குகென்று புதிய காவல் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று பேரூராட்சி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் கிழக்கு கடற்கரை சாலை ஒட்டி அமைந்துள்ளது இடைக்கழிநாடு பேரூராட்சி. 21 வார்டுகள் கொண்டுள்ள இந்த பேரூராட்சியில் சுமார் அறுபது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அவ்வப்போது கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி தகராறுகள் பல நடந்து வருகிறது. மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் தொடர் விபத்துகள் நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் போலீசில் புகார் அளிக்க சூனாம்பேடு அல்லது செய்யூர் காவல் நிலையம் செல்கின்றனர். இந்த இரண்டு காவல் நிலையங்களும் 10 முதல் 15 கிலோ மீட்டர் வரை தொலைவு கொண்டுள்ளதால் புகார் அளிக்க செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், அலைபேசி மூலம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் பட்சத்தில் சம்பவ இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் காவல் துறையினரும் செல்ல முடியாத நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இடைக்கழிநாடு பேரூராட்சியின் மைய பகுதியான கடப்பாக்கம் பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பேரூராட்சி மக்கள் நீண்டாண்டு காலமாக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதற்கான நடவடிக்கை இது வரை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, இப்பேரூராட்சி மக்கள் நலனை கருத்தில் கொண்டு இடைக்கழிநாடு பேரூராட்சிக்கென புதிய காவல் நிலையம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இடைக்கழிநாடு பேரூராட்சியில் காவல் நிலையம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Metropolitan Borough ,Jaipur ,Metropolitan Government ,Chengalpattu District, Jaipur Circle ,East Coast Road ,Idiakhynadu District ,Interstate Metropolitan Municipality ,Dinakaran ,
× RELATED காஞ்சியில் ரூ.24.64 கோடியில் கட்டப்பட்ட...