சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கனிம வளம் நிறைந்த நிலப்பகுதிகளுக்கு நில வரி வசூலிப்பது தொடர்பான சட்ட மசோதா, நீர்வளத்துறை அமைச்சகத்தால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதுபோல, தமிழ்நாட்டில் உள்ள 28 மாவட்டங்களுக்கு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் ஜனவரி 5ம் தேதியுடன் நிறைவு பெற்றதால், அந்த மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்வது தொடர்பான மசோதா கடந்த ஜனவரி மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இவ்விரு மசோதாக்களும் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டு நிலுவையில் இருந்தது.
இந்நிலையில், 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பழுப்புக்கரி, சுண்ணாம்புக்கல், சுண்ணாம்புக்களி, மாக்னசைட், காரீயம் உள்ளிட்ட 13 வகை கனிமங்களை பெரிய வகை கனிமங்களாகவும், கரட்டுக்கல், சரளை அல்லது மண், வண்ண மற்றும் கருப்பு கருங்கல், கூழாங்கற்கள், மணல், படிகக் கல், தீக்களிமண், உருட்டு களி மண், களிமண், ஆற்று மணல், நொறுங்கிய கல், சுண்ணப்பாறை உள்ளிட்ட 17 கனிமங்கள் சிறிய வகை கனிமங்களுக்கு நிலவரி விதிக்க இந்த சட்டம் வழி வகை செய்கிறது. இதன்படி, பெரிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரியும், சிறு கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரையும் வரி நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டில் பதவிக்கலாம் முடிந்த 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிப்பது தொடர்பான சட்ட மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்..!! appeared first on Dinakaran.