×

தூத்துக்குடி மாநகரில் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்

*தமாகா கோரிக்கை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகரில் தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமாகா தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் தெருக்களில் செல்வதற்கு அச்சப்படுகிறார்கள். குறிப்பாக பிரையண்ட் நகர், அண்ணா நகர், அமுதா நகர், டூவிபுரம், ஆசிரியர் காலனி, பண்டுகரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

நாய்கள் திடீரென ஒன்றுக்கொன்று சண்டையிடுவதால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம், தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

இல்லையெனில் தமாகா சார்பில் தெருநாய்களை பிடிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும். அதுபோல் மாநகராட்சி 60 வார்டுகளிலும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பல்வேறு நோய்கள் பரவும் வாய்ப்புள்ளதால் மாநகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தூத்துக்குடி மாநகரில் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Thamaka ,Thoothukudi Central District ,President ,S.T.R. Vijayaseelan ,Thoothukudi Corporation ,Dinakaran ,
× RELATED 2ம் நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம்