முக்வா: உத்தரகாண்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கவும், உத்தரகாண்டில் நடப்பாண்டு குளிர்கால சுற்றுலா திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பிரதமர் மோடி நேற்று உத்தரகாண்ட் சென்றார். அங்கு உத்தரகாசியில் உள்ள முக்வா கங்கை அம்மன் கோயிலுக்கு சென்ற மோடி, அங்கு கங்கைக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டார்.
தொடர்ந்து ஹாசிலில் நடைபெற்ற குளிர்கால சுற்றுலா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மலையேற்றம், சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “தேவபூமியான உத்தரகாண்ட்டுக்கு மீண்டும் வந்திருப்பதை பாக்கியமாக கருதுகிறேன். இந்த தசாப்தம் உத்தரகாண்டின் தசாப்தமாக மாறி வருகிறது.
இந்திய சுற்றுலா துறையை பன்முகப்படுத்தி, உயிரோட்டமுள்ளதாக மாற்றுவது உத்தரகாண்ட்டுக்கு மிகவும் முக்கியமானது. உத்தரகாண்டில் ஒவ்வொரு பருவமும் சுற்றுலாவுக்கான பருவமாக மாற வேண்டும். உத்தரகாண்ட் மாநிலத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்ற ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனால் உத்தரகாண்ட் வளர்ச்சி பெறும்” என்று தெரிவித்தார்.
The post இரட்டை இன்ஜின் அரசுகளால் உத்தரகாண்ட் வளர்ச்சி பெறும்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.