திருவாரூர், மார்ச். 6: திருவாரூர் கோட்ட அளவிலான மாற்றுதிறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவரவர்க்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வுகாணும் வகையில் கோட்ட அளவிலான சிறப்பு குறைதீர் கூட்டம் மாவட்ட அளவில் கலெக்டர் அலுவலகத்திலும், திருவாரூர் மற்றும் மன்னார்குடி ஆர்.டி.ஓ அலுவலகங்களிலும் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் கோட்ட அளவிலான கூட்டம் இன்று திருவாரூர் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்துகொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்துப்பூர்வமாக அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீதான கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கப்படும். வயது வரம்பு ஏதும் இல்லை. 18 வயதிற்குகீழ் உள்ளவர்களும் விண்ணப்பம் அளிக்கலாம். மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு, குறைகளுக்கு தீர்வுகாணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்கிட தக்க நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும். மேலும் முகாமிற்கு வருகையின்போது இருப்பிட முகவரிக்கான ஆதாரம், குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாளஅட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றைத் தவறாது கொண்டுவரவேண்டும் என்பதுடன் இதற்கு முன்னர் விண்ணப்பம் அளித்திருந்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின், அதனையும் தவறாது கொண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
The post திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுதிறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.
