தஞ்சாவூர், மார்ச் 4: தஞ்சாவூர் காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் அருண் என்பவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அந்த காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் 200க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு தினமும் காய்கறி வாங்குவதற்காக சுமார் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் வந்து செல்வார்கள்.
அவ்வாறு காய்கறி வாங்க வருபவர்களிடம் இருசக்கர வாகன கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இருசக்கர வாகனத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு பலகை மார்க்கெட் பகுதியில் எந்த ஒரு இடத்திலும் இல்லை. எனவே இதில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் சார்பில் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் அறிவிப்பு பலகை வைத்த பின்பு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
The post வாட்டி வதைக்கும் வெயில் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் வாகன கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு appeared first on Dinakaran.