வருசநாடு, மார்ச் 4: சிறப்பாறை சாலை புதுப்பிக்கும் பணியை முழுவதுமாக முடிக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடும்பாறை அருகே பாறைக்குளம் ஓடை முதல் சிறப்பாறை கிராமம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாததால் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்த சாலையை புதுப்பிக்க வேண்டும் என சிறப்பாறை கிராமமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து சாலையை புதுப்பிக்க டி.என்.ஆர்.ஆர்.ஐ.எஸ் திட்டத்தின் கீழ் ரூ.68 லட்சத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கீடு செய்தது. அப்போது ஒரு குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சாலை பணி நடைபெற்று முடிந்தது. அதன்பிறகு பணிகள் நடைபெறவில்லை. மீதமுள்ள பணிகள் எப்போது நடைபெறும் என எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். பணிகளை முழுவதுமாக முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் கூறுகையில், சிறப்பாறை சாலை புதுப்பிக்கும் பணி அரைகுறையாக கிடக்கிறது. சாலை மோசமாக கிடப்பதால் விவசாய பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் நிலவுகிறது. கிராம மக்கள் வாகனங்களில் செல்வதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சாலை பணிகளை முழுமையாக முடித்து மக்களின் சிரமத்தை போக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பாதியில் நிற்பதால் மக்கள் சிரமம் சிறப்பாறை சாலை பணி அரைகுறை: முழுவதுமாக முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.