சென்னை: நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகளை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்வதால், வரும் 4ம் தேதி காலை 10 மணி முதல் 5ம் தேதி காலை 10 மணி வரை 3 மண்டலங்களுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும், என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வரும் 4ம் தேதி காலை 10 மணி முதல் 5ம் தேதி காலை 10 மணி வரை (24 மணி நேரம்) வள்ளுவர்கோட்டம் குடிநீர் பகிர்மான நிலையம், தென்சென்னை குடிநீர் பகிர்மான நிலையம் மற்றும் கீழ்ப்பாக்கம் குடிநீர் பகிர்மான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படும்.
தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட சூளைமேடு, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, கோடம்பாக்கம், தி.நகர், ராயப்பேட்டை, கோபாலபுரம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட தி.நகர், மேற்கு மாம்பலம், மேற்கு சிஐடி நகர், மேற்கு சைதாப்பேட்டை, அடையாறு மண்டலத்திற்குட்பட்ட சைதாப்பேட்டை உள்ளிட்ட 3 மண்டங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
The post மெட்ரோ ரயில் பணி காரணமாக 3 மண்டலங்களில் 4ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.
