திருவாரூர், பிப். 27: திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி சாகுபடிக்கான விதை விதைக்கும் பணியில் விவசாய தொழிலாளார்கள் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியும் அதற்கு அடுத்தபடியாக பச்சை பயிறு மற்றும் உளுந்து சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்த நிலையில் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர்களையும் பயிரிடும் நிலைக்கு மாறினர்.
அதன்படி நெல் சாகுபடியடுத்து பச்சை பயிறு மற்றும் பருத்தி பயிர், வாழை, கரும்பு, கடலை, மரவள்ளி கிழங்கு உட்பட பல்வேறு பயிர்களையும் சாகுபடியையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமாக 20 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே இந்த பருத்தி சாகுபடியானது நடைபெற்று வந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பின்னர் கடந்த 2021ம் ஆண்டு முதல் இந்த பருத்தி பயிருக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் சாகுபடி பரப்பளவானது 2 மடங்காக அதிகரித்து 40 ஆயிரம் ஏக்கரில் கடந்த 3 ஆண்டுகளாக சாகுபடியானது நடைபெற்று வருகிறது.
மேலும் நடப்பாண்டில் வழக்கத்தை விட கூடுதலான பரப்பளவில் இந்த பருத்தி பயிரினை விவசாயிகள் சாகுபடி செய்யும் வகையிலும் தரமான விதையினை கொண்டு அதிகளவில் மகசூல் பெற்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாகவும் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறையின் சார்பில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் கடந்த டிசம்பர் மாதம் ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது. தற்போது சம்பா அறுவடை பணிகள் முடிவுற்ற வயல்களில் இந்த பருத்தி விதையினை விதைக்கும் பணியில் விவசாய தொழிலாளார்கள் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
The post திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி சாகுபடிக்காக விதையிடும் பணி மும்முரம் appeared first on Dinakaran.